குறள் 551:

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

Than one who plies the murderer's trade, more cruel is the king Who all injustice works, his subjects harassing
அதிகாரம் - 56 - கொடுங்கோன்மை
மு.வரதராசன் விளக்கம்
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
கொலை மேற்கொண்டாரின் கொடிது - பகைமை பற்றிக் கொல்லுதல்தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன், அலைமேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும்வேந்து - பொருள்வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறைஅல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன். (அவர் செய்வது ஒருபொழுதைத் துன்பம், இவன் செய்வது எப்பொழுதும்துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால்மயக்கு உறழ்ச்சி .'வேந்து' என்பது உயர்திணைப்பொருட்கண் வந்த அஃறிணைச் சொல். 'அலை கொலையினும் கொடிது'என்பதாயிற்று.)
சாலமன் பாப்பையா விளக்கம்
குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.