குறள் 1165:

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

Who work us woe in friendship's trustful hour, What will they prove when angry tempests lower
அதிகாரம் - 117 - படர்மெலிந்திரங்கல்
மு.வரதராசன் விளக்கம்
( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?
பரிமேலழகர் விளக்கம்
(தூது விடாமை நோக்கித் தோழியோடு புலந்து சொல்லியது) நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர் - இன்பஞ்செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பவரவினைச் செய்ய வல்லவர்; துப்பின் எவனாவர் கொல் - துன்பம் செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வர் கொல்லோ? (துப்புப் பகையுமாதல், 'துப்பெதிர்ந்தோர்க்கே யுள்ளாச் சேய்மையன் நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை யண்மையன்' (புறநா.380) என்பதனானும் அறிக. அப்பகைமை ஈண்டுக் காணாமையின், 'அவர் செய்வது அறியப் பெற்றிலேம்' என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. துயர் வருதலை விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை எனப் புலக்கின்றமையின், துயர் வரவு செய்தாளாக்கியும் பிறளாக்கியும் கூறினாள்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?