குறள் 915:

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

From contact with their worthless charms, whose charms to all are free, The men with sense of good and lofty wisdom blest will flee;
அதிகாரம் - 92 - வரைவின்மகளிர்
மு.வரதராசன் விளக்கம்
இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
மதி நலத்தின் மாண்ட அறிவினர் - இயற்கையாகிய மதிநன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; பொது நலத்தார் புல்நலம் தோயார் - பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார்.(மதி நன்மை - முற்பிறப்புக்களில் செய்த நல்வினைகளான் மனம் தெளிவு உடைத்தாதல். அதனான் அன்றிக் கல்வியறிவு மாட்சிமைப்படாமையின், 'மதிநலத்தின் மாண்ட அறிவினவர்'என்றும்,அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொதுமையும் மெய்ந்நலத்தது புன்மையும் விளங்கித் தோன்றலின், 'தோயார்'என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.