குறள் 616:

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

Effort brings fortune's sure increase, Its absence brings to nothingness
அதிகாரம் - 62 - ஆள்வினையுடைமை
மு.வரதராசன் விளக்கம்
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.
பரிமேலழகர் விளக்கம்
முயற்சி திருவினை ஆக்கும் - அரசர் மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்தி விடும் - அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும். (செல்வம் - அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே, பகைவரான் அழிவர் என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.